Monday, November 08, 2021

கந்தசஷ்டி விரதம் முடித்தல் - #பாரணை



விரதம் முடித்தல் என்பது காலையில் செய்ய வேண்டும் என்று கூறுவர். இது சூரிய உதயத்தின் அடிப்படையில் ஆகும். ஆனால் சந்திர நாட்களைக் கருத்தில் கொள்ளும்போது சஷ்டி முடிந்து சுத்தமான முழு எழுமையில் (சப்தமியில்) விரதம் முடித்தலை (பாரணை) மேற்கொள்ளலாம்.

விரதம் முடிக்கும்போது சித்தர்கள் கூறிய ஆரோக்கியமான உணவு உண்ணும் காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில் எமது உடல் இயக்கங்கள் சூரிய உதயத்திலும் சூரிய மறைவின் அடிப்படையிலுமே தங்கியுள்ளது. சித்தமருத்துவத்தில் நோயில்லா வாழ்வுக்கான வழிமுறைகளில் சித்தர்களால் கூறப்பட்ட உணவு உண்ணக்கூடிய நேரங்களைக் கருத்தில் கொள்

"தருமநூல் விதியிரண்டே தப்பிமுக்கா லுண்ணவெனில்
சிருமிதலை காலைமுற்றச் சேய்பருவ – வருமுகூர்த்த
மொன்றுக்கு ணாண்குக்கு ளோத மிரண்டுக்கு ளுண்பர்
னன்றுக்குத் தீயோர் நயந்து.”

தரும நூல்களின் அடிப்படையில், இரண்டுவேளை உணவே உண்ணுதல் வேண்டும். இதைத் தவிர்த்து 3 வேளை உண்ண வேண்டுமெனில், சமமாக்கினி உள்ளவர்கள் சூரிய உதயம் தொடங்கி 1 ½ மணி நேரத்துக்குளளாகவும்;, காலைப் பருவமாகிய 6 மணி நேரத்துக்குள்ளாகவும், பொழுதின் மூப்பு பருவமான இரவில் 9 மணிக்குள்ளாகவும் உணவு உட்கொள்ள வேண்டும்.


“மூன்றுநான் காரெண் முகூர்த்தங்க ளின்முறையே
ஞான்று ளுண்ணுமந்த நறுமுணவே – தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோமுயிற் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்”
- #ஆகாரமே #ஆதாரம் நூல், பக்.74-75

சூரியன் உதயமாகி, 4 மணித்தியாலம் 30 நிமிடங்களுக்குள் உண்ணும் நல்ல உணவானது உடலுக்குப்பொருந்தும். 4மணித்தியாலம் 30 நிமிடங்கள் தொடங்கி 6 மணித்தியாலத்துக்குள் உண்ணும் மிதமான உணவானது நோய்களை ஏற்படுத்தாது. 6 மணித்தியாலங்கள் தொடக்கம் 9 மணித்தியாலங்கள் வரை உண்ணும் உணவு நோய்களை உருவாக்கும். 9 மணித்தியாலங்களின் பின் 12 மணித்தியாலங்களுக்குள் உண்ணும் உணவானது உயிரைக் கொள்ளும் நோய்களை வருவிக்கும்.

உதாரணமாக சூரிய உதயம் காலை 6 மணி எனில்,

முற்பகல் மணி 10.30 இற்குள் உணவு உட்கொண்டால் உடலுக்குப் பொருந்தும்.

முற்பகல் 10.30 இல் இருந்து மதியம் மணி 12 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் ஏற்படாது.

மதியம் 12 இல் இருந்து பிற்பகல் மணி 3 இற்குள் உணவு உட்கொண்டால் நோய்கள் உருவாகும்.

பிற்பகல் 3 இல் இருந்து மாலை 6 மணிக்குள் உணவு உட்கொண்டால் உயிரைக் கொள்ளும் நோய்கள் உருவாகும்.

இவற்றினைக் கருத்தில் கொண்டே விரதம் முடித்தலை (பாரணை) காலையில் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்படுகின்றது.

ஆனால் இம்முறை போல் (2021) பிற்பகல் 2.29 இற்கு சஷ்டி திதி முடிவடையின், தொடர்ந்து வரும் சப்தமியில், சூரிய உதயத்தை அறிந்து சித்தர்களின் வாக்குக்கமைய இரவு 9 மணிக்கு முன் விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.

Thursday, November 04, 2021

குழந்தைவரம் தரும் கந்த சட்டி விரதம்.


குழந்தைவரம் வேண்டி முருகனை நினைத்து விரதமிருக்க அவரே குழந்தையாக பிறப்பார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தில் உண்மை உள்ளதா?

திருப்புகழில் முருகனே குழந்தையாக வேண்டும் என்று வேண்டுகின்றார் அருணகிரிநாதர்..


செகமாயை
யுற்றெ னகவாழ்வில் வைத்த

     திருமாது கெர்ப்ப ...... முடலூறித்

தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்

     திரமாய ளித்த ...... பொருளாகி

மகவாவி னுச்சி விழியாந நத்தில்

மலைநேர்பு யத்தி ...... லுறவாடி 

மடிமீத டுத்து விளையாடி நித்த

           மணிவாயின் முத்தி ...... தரவேணும் 
      ……………………………………….




இந்த உலக மாயையில் சிக்குண்டு, இல்லற வாழ்வில் எனக்குக் கிட்டிய அழகிய மனைவியின் கருவில் உருவாகி பத்து மாதம் கர்ப்பத்தில் வளர்ந்து, நல்ல அழகோடு  பூமியில்  தோன்றிய குழந்தைச் செல்வமாக நீ எங்களுக்குப் பிறந்து, குழந்தைப் பாசத்தினால் நான் உன்னை உச்சிமோந்து, விழியோடு விழிவைத்துமுகத்தோடு முகம் சேர்த்து, எனது மலை போன்ற தோள்களில் நீ தழுவி உறவாடி, என் மடியில் அமர்ந்து குழந்தையாக விளையாடி,நாள்தோறும்  உன் மணி வாயினால் முத்தம் தந்தருள வேண்டும் என்று திருப்புகழ் பாடுகின்றது

குழந்தைப் பேறின்மைக்கு  பலவாறான உடற்கோளாறுகள் காரணமாகின்றன. சிலவகை உடற்கோளாறுகளுக்கு  “இலங்கணம் பரம ஔடதம்” என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்று. இலங்கணம் இருத்தல் என்பது நீர் கூட அருந்தாமல் விரதமிருப்பது ஆகும்.

இவ் இலங்கன செயற்பாடே தமிழர் வாழ்வியலில் பலவகை விரதங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதன. அவ்விரதங்களில் ஐப்பசி சட்டி விரதம் சிறப்பான ஒன்றாகக் காணப்படுகின்றது. இதனையே “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என பழமொழியாக சொல்லியுள்ளார்கள். அதாவது கந்த சட்டியில் ஆறுநாட்களும் விரதம் இருந்தால் அக பையில் வரும் என்பதாகும்.

அக பையில் என்பது ஆணினது விதைப்பை, பெண்ணினது கர்ப்பப் பைகள் என்பதாகும். இவர்களது இனப்பெருக்க உறுப்புக்களில் ஏதேனும் மாறுபாடுகள், குறைபாடுகள் இருப்பின் அவை நீங்கி குழந்தைப்பேறு உண்டாகும் என்பதே இதன் கருத்தாகும்.

கந்த சட்டி விரதம், ஆறு நாட்கள் கைக்கொள்ளப்படும் ஒரு விரதமாகும். அதாவது ஐப்பசி வளர்பிறைப் பிரதமை முதல் சஷ்டி ஈறான ஆறு நாட்கள் ஆகும்.

சில வேளைககளில் சஷ்டி திதி நேரங்கள் ஆறாவது நாள் மாலை நேரம் வரை தொடராது விடின், சூர சம்காரம் சஷ்டி திதியில் மாலை நேரத்தில் நடைபெற வேண்டும் என்பதால், சஷ்டி திதியை கருத்திற்கொண்டு ஐந்தாவது நாளே சூரசம்காரம் இடம்பெறுவதும் உண்டு. ஆனால் திதி கணக்கின் பிரகாரம் ஆறு நாட்கள் விரதமிருப்பது அவசியமாகும்.

சித்தமருத்துவ அடிப்படையில் எமது உடலானது சாரம் (Seruum), இரத்தம், தசை கொழுப்பு, என்பு, மூளை  விந்து அல்லது முட்டை (ஆணில் விந்து, பெண்ணில் கருமுட்டை) வரையான ஏழு அடிப்படை உடல் அமைப்புக்களால் ஆனது. இவற்றில் முதலாவது உடற்கட்டுக்கு, நாம் உண்ணும் உணவின் மூலம்  போசணை சென்று அதனைப் போசித்த பின்னரே ஒழுங்கு முறையில்  ஒவ்வொரு உடல் அமைப்புக்களும் போசணையைப் பெறுகின்றன.

அவ்வாறு பார்க்கும்போது நாம் உண்ணும் உணவானது முதல் நாள் சாரம் (Serum) எனப்படும் உடற் கட்டினைப் போசித்து ஏழாவது நாள் விந்து அல்லது கரு முட்டையை போசிக்கும். இதன் அடிப்படையில் முதல் நாள் விரதம் இருக்கும்போது முதலாவது உடற்கட்டான சாரம், போசணை கிடைக்காது இலங்கணம் காக்கப்படும். ஆனால் முதல் உண்ட உணவுகளின் போசணையானது ஏனைய உடற்கட்டுக்களை தொடர்ந்து போசிப்பதால் அவ்வுடற் கட்டுக்களுக்கான இலங்கணம் நடைபெறமாட்டாது.

இவ்வாறு படிப்படியாக நாட்கள் கூடிச்செல்ல முறையே இரண்டாது, மூன்றாவது என ஏனைய உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. இவ்வாறாக ஆறாவது நாள் இலங்கணத்தின் போது  ஏழாவது உடற்கட்டான விந்து அல்து முட்டை என்பன முன் உண்ட உணவின் போசணையினால் போசிக்கப்டுகின்றன.

ஏழாவது நாழ் பாறணையின்போது உணவினை உட்கொள்ளும்போது மேற்படி ஏழாவது உடற்கட்டுக்கள் இலங்கணத்தை அடைகின்றன. இப்பொழுது உடலின் ஏழு உடற்கட்டுக்களும் இலங்கணத்தை அடைகின்றன. 

ஆனாலும் ஆறு நாட்கள் கடும் விரதம் இருத்தலின் போது அடிப்படை உயிர்நிலை அனுசேப தொழிற்பாடுகளுக்கான சக்தியை வழங்குவதற்காக, ஏழு உடற்கட்டுக்களுக்கும் உடனடியாக சக்தியைத் தரக்கூடிய சாத்வீக குணமுடைய, மாறுபாடுகளை ஏற்படுத்தாத,   உணவான பால்  அல்லது தண்ணீர் மட்டும்  ஒருவேளை உணவாக கொள்ளப்பபடுகின்றது. அல்லது அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப பாலும் மேற்படி வகையான பழவகையும் ஒருவேளை மட்டும் உட்கொள்ளப்படுகின்றது.

இவற்றின் அடிப்படையில், இறைமருத்துவமான சித்தமருத்துவமானது முதற்சித்தன் சிவனின் ஊடாக முருகப்பெருமானுக்கு அருளப்பட்டு முருகப் பெருமானாலேயே அகத்தியர் திருமூலர் முதலான சித்தர்களினூடு மானிடர்களுக்கு வழங்கப்பட்டதாக சித்தமருத்துவ வரலாறு கூறுகின்றது.

அவ்வாறு உருவான மருத்துவம் கூறும் “இலங்கணம் பரம ஓளடதம்” என்பதனை சரிவர மேற்கொள்ள வேண்டுமாயின் ஆறு நாட்களும் இலங்கணம் எனும் விரதமிருத்தல் அவசியமாகின்றது.

ஆறுநாட்களும் இறை சிந்தையுடன் இவ்வாறு விரதமிருக்கும்போது மனம் ஒருநிலைப்பட்டு தெளிவடைகின்றது. தேவையற்ற உளநெருக்கீடுகள் மறைகின்றன. உளநெருக்கீடுகள் ஓமோன் செயற்பாடுகளில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன.

முக்கியமாக உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புப் படிவுகள் விரதத்தின்போது கரைவதால் உடல் எடை குறைகின்றது. அதி உடற்பருமன் பல நோய்களுக்கும் குழந்தைப் பேறின்மைக்கும் காரணமாகின்றது.

எனினும் இலங்கணம் மேற்கொள்ளும்போது உடலின் ஆரோக்கியம், நோய்நிலைகளைக் கருத்தில் கொள்வதும், மருத்துவர்களின் ஆலோசனையுடன் மேற்கொள்வதும் இக்காலத்துக்கு அவசியமானதாகும்.

இவற்றினாலேயே கந்தசட்டி விரதம் தமிழர் மத்தியில் சிறப்புப் பெறுகின்றது.

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.