Sunday, March 30, 2008

இலங்கையில் சித்த மருத்துவம்.............

இலங்கையின் சுதேச மருத்துவ முறைகளுள் சித்த மருத்துவமும் ஒன்றாகும்.சித்தமருத்துவமானது தமிழ்மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவதால் இதனை தமிழர் மருத்துவம் எனவும் கூறப்படுகின்றது.
சித்தமருத்துவத்தின் வரலாற்றினை பார்க்கையில் சித்தமருத்துவமானது ஆரம்பத்தில் சிவபெருமானால் உமையம்மையாருக்கு கூறப்பட்டதாகவும், உமையம்மையார் அதனை முருகனுக்க கூற, முருகன் அதனை அகத்தியர், திருமூலர் முதலான சித்தர்களுக்கு உபதேசித்ததாகவும், இச்சித்தர்களே உலகில் சித்த மருத்துவத்தை பரப்பியதாகவும் கூறுவர். சிவபெருமான் உமாதேவியாருக்கு கூறும்போது நந்திதேவர் அதனை கேட்டு அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு கூறியதாகவும் வரலாறு உண்டு.


சித்தமருத்துவமானது பாரதத்தின் (இந்தியா) தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம் ஆகிய பகுதிகளிலும் பாரதத்தின் தென்பகுதியில் அமைந்துள்ள இலங்கையிலும் காணப்படுகின்றது. அதாவது குமரிக்கண்டத்தின் தென்பகுதிகளான தமிழ்நாடு, கேரளம், இலங்கை ஆகிய நாடுகளில் சித்தமருத்துவம் பயன்பாட்டில் உள்ளது.


இலங்கையை ஆண்ட இராவணன் சிறந்த சிவபக்தனாக மடடுமன்றி சிறந்த வைத்தியனாகவும் இருந்துள்ளான். சிவபெருமானால் சித்தர்களுக்கு அருளப்பெற்று சித்தர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் சித்தர் மருத்துவம் எனவும், தமிழ்கடவுளாகிய முருகனால் அகத்தியர், திருமூலர் போன்றவர்க்கு சொல்லப்பட்டு தமிழர்களால் பின்பற்றப்பட்டு வந்தமையினால் தமிழ் மருத்துவம் எனவும் அழைக்கப்படுகின்றது.


ஆதிகாலத்தில் சித்தமருத்துவமானது இலங்கை முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்கு பல சான்றுகள் உள்ளன. பொலனறுவையில் அமைந்துள்ள பொற்கல் விகாரையில் சித்தமருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் அகத்திய முனிவரின் சிலை காணப்படுகின்றது.


15ம் நூற்றாண்டில் சிங்களத்தில் ஆக்கப்பட்ட "வைத்திய சிந்தாமணி பைசாஜ் சங்கிரகம்"(Vaidyacindamani bhaisadya) என்னும் நூல் "வைத்திய சிந்தாமணி" எனும் தமிழ் மருத்துவ நூலை தழுவி எழுதப்பட்ட நூலாகும் என்ற கருத்தும் உள்ளது.


சித்த மருத்துவம் கூறும் நவநாத சித்தர்களுள் ஒருவரான கோரக்கர் திருகோணமலையில் சித்தயடைந்தார் என்பதும் கவனத்திற்கொள்ளத்தக்கது. பதினெண் சித்தர்களுள் ஒருவரான புலத்தியர் சிங்கள நாட்டை சேர்ந்தவரென குறிப்பிடப்படுகின்றது. இங்கு சிங்கள நாடு என்பது இலங்கையாகும். அத்துடன் யாழ்ப்பாண மன்னன் பரராஜசேகரனின் மகன் பரநிருபசிங்கன் சிறந்த மருத்துவனாக திகழ்ந்துள்ளான்.
எனினும் பிற்பட்ட காலத்தில் சித்தமருத்துவமானது இலங்கையில் வடக்கு, கிழக்கு பகுதிகள்லேயே பெருமளவு கையாளப்பட்டு வரப்படுகின்றது. அதிலும் இலங்கையில் சித்தமருத்துவத்தின் தாயகம் யாழ்ப்பாணமாக விளங்குகின்றது என்று கவிப்புயல் நவரத்தினம் அவர்களும், சித்த மருத்துவமானது அதன் தூய்மையுடனும் தனித்துவத்துடனும் யாழ்ப்பாணத்தில் இன்றுவரை கையாளப்பட்டு வரப்படுகின்றது என்று பேராசிரியர் உரகோட அவர்களும் எடுத்து கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றுடன் சோழ இழவரசியான மாருதப்புரவள்ளியின் புற்றுநோயை குணப்படுத்தியதும் இதனால் யாழ்ப்பாணத்தில் முருகனுக்கு கோயில் கட்டியும், கதிர்காம யாத்திரையை முருகன் அருளால் தொடங்கி கதிர்காம இயந்திரத்தை ஸ்தாபித்தவர் பதினெண் சித்தர்களுள் ஒருவரான போகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே அங்கு இன்றும் மூலிகைச்சந்தை காணப்படுகின்றது.
முக்கியமாக கடலிராஞ்சிப்படடை, மரமஞ்சள், புலிநகம், சீந்தில், செஞ்சந்தனம், உருத்திராட்சை என்பன பெருமளவில் காணப்படுகின்றது. அத்துடன் சித்தமருத்துவ யாழ்ப்பாண நூலான பரராஜசேகரத்தில் " மருந்து மாத்திரைகள் பிழைத்தால் கதிரைமலை மேவு முருகனை வணங்கிட அந்நோய்கள் மாறிடும்" என்று நூலின் பல இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு பல வழிகளிலும் இலங்கையில் கானப்பட்ட சித்தமருத்துவம் காலப்போக்கில் தமிழர் அதிகமாக வாழும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டு இங்கு வாழ்ந்த மன்னர்களாலும், மக்களாலும், சித்தமருத்துவர்களாலும் பேணி வளர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வலுவான சித்தமருத்துவ பாரம்பரியம் உருவாக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று அதன் ஆழமான அறிவினைப்பெற்றுக்கொண்டோர் எத்தனைபேர் என்பது கேள்விக்குறியே.


Wednesday, March 19, 2008

கற்றாழை


Aloe barbadensis, M ill

இந்தியா, இலங்கையில் நிறைவாக கானப்படுகிறது.

மருத்துவ குணங்கள் - பலகாரி (Tonic), உடற்தேற்றி, நீர்மலம்போக்கி (பேதி), ருதுவுண்டாக்கி (Emmenagogue)

கலப்பைக்கிழங்கு

Gloriosa superba, linn

இம்மூலிகை வங்காளம், இந்தியா, இலங்கையில் கானப்படும் நச்சுமூலிகையாகும்.

கார்த்திகை மாதங்களில் மலர்கள் கானப்படும்.

மருத்துவகுணங்கள்- உடற்தேற்றி, முறைவெப்பமகற்றி, கழிச்சலுண்டாக்கி.

Tuesday, March 11, 2008

சித்தர்கள் பார்வையில் ஆரோக்கியம்.....

சித்தர்கள் தெய்வ அருள் பெற்றவர்கள். இல்லறமோ, துறவறமோ மனிதன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவேண்டும் என்பவர்கள். இதனை திருமூலர் திருமந்திரத்தில்,
"உடம்பால் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"
என்கிறார்.
இதற்காக சித்தர்கள் பல வழிகளை கூறிச்சென்றுள்ளார்கள். காயகற்பம், முப்பு, பிராணாயாமம், யோகாசனம் என்பன அவற்றுட் சில.
இதனை அடிப்படையாக கொண்டே சித்த மருத்துவம் காணப்படுகின்றது. அதாவது நோய் வருமுன் காத்தல் (Primary prevention). ஆனால் இன்றைய காலகட்டத்தில் மக்களின் அன்றாட நடவடிக்கைகளும், உணவுப்பழக்கவழக்கங்களும், போட்டித்தன்மைகளும் நோய் வருமுன் காத்தல் என்பதற்கு பெரும் சவாலாக உள்ளன. இவ்வாறன வேளையிலும் நோய்வந்த பின்னர் மக்களிடம் உள்ள விழிப்புணர்வின்மையால் உரிய மருத்துவத்தை நாடுவதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இறுதியாக சித்தமருத்துவத்தை குறிப்பிட்ட நோய்களிற்கு நாடும் பொழுதும் குழப்பத்தை விளைவிக்கிறது அவர்கள் எதிர்பார்க்கும் "உடனடித்தீர்வு".
ஆரோக்கியமாக வாழ்வதற்கு "உணவே மருந்து" என்பது சித்தர்களின் கூற்று. இதனையே திருக்குறளில் திருவள்ளுவர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்,
"மாறுபாடில்லா உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடில்லை உயிர்க்கு"
இதனை கீழ்வரும் சித்தர் பாடலும் இவ்வாறு விளக்குகின்றது.
"நோயனுக்குப் புத்தி நுவலுவேன் உண்டதற்ற
காய மறிந்து கடைப் பிடித்துத் - தீயலதை
உண்கப் பசிமிகுதி யுற்றதறி ந்தானக்காலி
அண்கற்ப நல்லுறுதியாம்"
தேவையான அளவு உணவினை தேவையான நேரத்தில் எடுக்காது விடில் அல்லது மேலதிகமாக எடுக்கும் போது நோய் ஏற்படுகின்றது. இவ்வாறு நோய் ஏற்படினும் ஆரோக்கியத்தைப்பேணிக்கொள்ள படிப்படியாகவே மருந்துகளை பிரயோகிக்கும்படி கூறியுள்ளார்கள். ஆனால் இன்று ????. இதனை பின்வரும் கூற்று விளக்கும்.
"வேர்பார் தழைபார் மிஞ்சினாற்கான்
பஸ்பசெந்தூரம் பார்"
அதாவது படிப்படியாகவே மருந்துகளின் வீரியத்தை கூட்டச்சொல்லியிருக்கிறார்கள்.
ஆரோக்கியத்தை மேம்படுத்த உணவு எவ்வளவு முக்கியமோ அந்தளவிற்கு உடற்பயிற்சி முக்கியமானதாகும். இத்துடன் மனம் நன்நிலையில் இருத்தல் மேலும் அவசியமாகும். மனம் நன்நிலையில் இருத்தல் வேண்டும் என்பதை பின்வரும் சித்தர் கூற்று மூலம் அறிந்துகொள்ளலாம்.
"விரும்பியது கிடைக்காமையும், விரும்பாதது கிடைத்தலும் ரோகத்தை உண்டுபண்ணும்"
இன்றைய காலகட்டத்தில் நோய்களை உண்டு பண்ணுவதில் மனம் முக்கியபங்கினை வகிக்கின்றது. இதற்கு முக்கியமான காரணம் மக்களிற்கிடையேயான போட்டித்தன்மையும், இயந்திரமயமான வேக வாழ்க்கை முறையாகும்.
உணவு, உள்ளம் போன்றனவே நோய்க்கு காரணமென்பதனை பின்வரும் சித்தர் பாடல் நன்கு விளக்குகின்றது.
"பிணிக்கேது கரமென்ப பேசுதல்வே றில்லை
தணிக்காத கோபத்தாற் றாகந் - தணிக்காமை
யாலுண்டி யாற்புணர்ச்சி யாலீரத்தாற் சுமையாகீ
மேலும் பிணிகளறுமே"
அதாவது அதிகமாக கோபப்படுதல், மிக்க நீர் வேட்கையை தணிக்காமை, மாறுபாடான உணவுமுறைகள், ஒவ்வாத புணர்ச்சிகளினால் உடலுக்கு சுமையுண்டாகி நோய்களைத்தோற்றுவிக்கும்.
எனவே நாம் எமது உணவினையும், உள்ளத்தினையும், உடலுக்கேற்ற உடற்பயிற்சியினையும் சரியாக பேணிக்கொள்வோமானால் நோய்களில் இருந்து தப்பி ஆரோக்கியமாக வாழலாம்.

Saturday, March 08, 2008

சித்தமருத்துவமும் சுகவாழ்வும்..

வணக்கம்!
இந்த வலைப்பூவினூடாக சித்தமருத்துவம் தொடர்பான பயனுள்ள தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம் என விரும்புகிறேன். தொடர்ந்தும் எதிர்பாருங்கள்.
நன்றி..!

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.