Tuesday, August 31, 2021

கொரனாவும் தனிமனித, சமூகப் பிரச்சினைகளும்

உயிர்கள் கூடிக் கதைப்பதில், கொண்டாடுவதில், பகிர்தலில் மகிழ்வுறும், திருப்தியுறுவன. அதிலும் மனித இனம் இதில் சந்தோசத்தை அனுபவிப்பதும், ஆறுதலடைவதும், வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்வதிலும் சமூகப்பிராணியாக நேரடியான தொடர்பாடலிலும், கூட்டாக வாழ்வதில் தங்கியே வாழ்கின்றான்.

நேரடியாக தொடர்பாடல்களை மேற்கொள்ளும்போது திருப்தியடையும் விதமாகவே மனிதனின் மரபணு அமையப் பெற்றுள்ளதாக உளவியளார்கள் கூறுகின்றார்கள். இந்நிலையில் தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சி மனிதர்களின் சமூக நிலையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தினாலும், தொடர்பாடல் சாதனங்களின் வளர்ச்சியில் நன்மைகள் அதிகம் காணப்பட்டாலும், தீமைகளும் காணப்படத்தான் செய்தன. இதனால் பல சமூகப்பிறழ்வுகள், உறவுகளில் இடைவெளி என பல பிரச்சனைகள் மக்களிடையே மெலிதான வெறுமையை, குறிப்பாக வயோதிபர்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றன.

இதனால் வெறுமை, தனிமை, பதகளிப்பு, மனச்சோர்வு, விரக்தி, தற்கொலை எண்ணங்கள் என பல்வேறு உளச்சிக்கல்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

இதன் இரண்டாம் அலையாக 2020 மார்ச்சில் இருந்து இன்று வரை கொரனா நோய்த்தொற்றின் காரணமாக வலிந்து உருவாக்கப்பட்ட தனிமை, தனிமைப்படுத்தல்கள், சமூக இடைவெளி, முகக்கவசம், நோய்த்தொற்று மீதாக பயம், பொருளாதார நெருக்கடி என்பன மக்களிடம் அதிகரித்து இன்று பல உளரீதியிலான பிர்ச்சினைகளை எதிர்கோள்ள வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

ஆரம்பத்தில் தொலைபேசி, இணையமூல தொடர்பாடல்களுக்கு ஓரளவு பழக்கப்பட்டிருந்த மக்களுக்கு கொரனா முடக்கங்கள், தனிமைப்படுத்தல்கள், பயனத்தடைகள் ஏற்படுத்திய பாதிப்புக்கள் பெரிதாக தெரியவில்லை. அத்துடன் கொஞ்சக்காலத்துக்குத்தானே என்ற உணர்வும் உளத் தாக்கங்கங்களை அதிகப்படுத்தப்படுத்தவில்லை.

காலம் போகப்போக மாதம் மாதங்களாகி, வருடம் வருடங்களாக…. நோய்த்தொற்று தொடர்பான பயமும், தொழில்களில் ஏற்பட்ட நெருக்கடிகள், நாட்டின் பொருளாதார தொய்வும் அதனால் ஏற்பட்ட பொருட்களின் விலையுயர்வுகளும் மக்களிடம் பலவிதமான உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தியதுடன், தலையிடி, நாரிநோ, மாதவிடாய் தொடர்பான கோளாறுகள்,  என பல மெய்பாட்டு முறைப்பாடுகளும், உடற்பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் என தொற்றாநோய்களின் தீவிரமும் அதிகரித்துள்ளன. அதிலும் மக்கள் வரப்பிரசாதமாக எண்ணி அதீத நம்பிக்கை கொண்ட தடுப்பூசிகள் தொடர்பான வதந்திகள், தடுப்பூசி போட்டவர்களுக்கும் ஏற்பட்ட நோய்த்தொற்று இவ்வாறான பிரச்சினைகளை மேலும் அதிகரித்துகொண்டது.

பொதுவாக மனித நடத்தையானது நீண்ட கால உளநெருக்கடிகள் ஏற்படும்போது மாற்றமடையத் தொடங்குகின்றன. ஆனால் அந்நடத்தை மாற்றங்கள் எவ்வாறானதாக அமையும் அது தனிமனித வாழ்க்கைக்கு, சமூக வாழ்க்கைக்கு இசைவானதாக இருக்குமா என்பதே கேள்வியாகும்.

இன்று சமூகவலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், நகைச்சுவையாகவும் பரிமாறப்படும் படங்கள் நாடு முடக்கப்படும்போது, அல்லது ஏதேனும் பயனத்தடைகள் வரும்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் முண்டியடித்து வரிசையில் நிற்பது. ஆனால் இதில் ஒரு பகுதியினர் மதுபானசாலைகளில் வரிசையில் நிற்பது என்பது எமது பாரம்பரிய நடத்தைமாற்றங்களில்  முக்கியமானதொன்றாக கவனிக்கப்படவேண்டியது. திருமணங்கள் பேசும்போது மாப்பிள்ளை பியர் மட்டுந்தான்! குடிக்கிறவர் என்பதை சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்படுவது. அதேபோல் க.பொ.த. உயர்தரத்தில் வெற்றியடைந்தமைக்காக வீட்டில் நடாத்தப்படும் கொண்டாட்டத்தில் கூட பியர் பரிமாறுவது. இவ்வாறான சமூக மாற்றங்கள் படிப்படியாக நீண்டகால போரின் பின்னரான மனநிலை மாற்றங்களாக ஏற்பட்டுள்ளன. இவை தொடர்பாக சமூகமட்டத்திலோ, அரசியல் மட்டத்திலோ, நிர்வாக மட்டத்திலோ போதிய விழிப்புணர்வோ, செயற்பாடுகளோ இல்லாமை கவனத்திற் கொள்ளப்படவேண்டியது ஆகும்.

பொதுவாக இவ்வாறான அறிவியலை மிஞ்சிய இயற்கை அனர்த்தங்கள், நோய்கள் ஏற்படும்போது மக்களிடையே பாரம்பரியங்கள் தொடர்பான நம்பிக்கைகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள், தெய்வநம்பிக்கைகள் அதிகரித்துக் காணப்படும். ஆனால் நம்பிக்கைகள் நம்பிக்கைகளாகவே இருக்கும் நடைமுறைப்படுத்தமாட்டார்கள். கடவுள் விட்ட வழி என தமது பொறுப்புக்ளை தட்டிக்கழிக்கும் மனோநிலைக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்.

இப்படியான நிலையில் சமூகத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், ஆன்மீகத் தலைவர்கள் மக்களை சரியான வழிக்கு திசைதிருப்புதல் வேண்டும். இது அவர்களது கட்டாயக் கடமையாகும். ஆனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு அவர்கள் சரியான தகுதியுடையவர்களாக, விழிப்புணர்வைக் கொடுக்கக் கூடியவர்களாக, அறிவியல் ரீதியலாக பிரச்சினைகளை அணுகக் கூடியவர்களாக இருத்தல் வேண்டும். மாறாக இவ்வாறன சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தி மூடநம்பிக்கைகளை விதைப்பவர்களாக இருத்தல் கூடாது.

இன்றைய சமூகத்தில் சமூக மாற்றங்களில் முக்கியமாக செயற்படுபவர்கள் மேற்கூறியவர்களை விட ஊடகவியலாளர்களே. முக்கியமாக சமூகவலைத்தள ஊடகவியலாளர்களே. இவர்கள் தனியே முந்திக்கொண்டு, பரபரப்புக்காக செய்திகளை வெளியிடாமல் சமூகப்பொறுப்புடன், ஒவ்வொரு களநிலைமைகளையும் ஆராய்ந்து, உரிய துறையினருடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்று செய்திகளைப் பதிவிட வேணடும்;. உதாரணமாக இன்றைய சூழலில் தடுப்பூசி தொடர்பான ஏராளமான வதந்திகளும், தவறான தரவுகளுமே பதியப்படுகின்றன. சாதாரணமாக பதிவிடுபவர்கள் ஒன்றை யோசிப்பதில்லை, அதாவது உணர்ச்சி பூர்வமாக போதிய ஆதாரங்கள் இல்லாது தங்களைச் சுற்றியுள்ள சில சம்பவங்களை அல்லது நபர்களை மட்டும் வைத்துக்கொண்டு, அல்லது ஆதாரமற்ற வேறு சமூகவலைத்தள செய்திளை வைத்துக்கொண்டு பதிவுகளை மேற்கொள்ளும்போது, தடுப்பூசியை உருவாக்கும்போது எவ்வளவு தூரம் எத்தனை துறைசார் நபர்கள், எத்தனை அமைப்புக்கள் அவற்றில் தொழிற்படுகின்றார்கள் என்பதை பற்றியும், நாம் இந்தக் காலத்தில் என்ன செய்தோம் என்பது பற்றியும் ஆகும்.

இவ்வாறன பொறுப்பற்ற பதிவுகள், ஏற்கனவே நோய்த்தடுப்பில் ஈடுபடுபவர்களை சிக்கலிலும் அவர்களது பணிச்சுமையை அதிகரிப்பதிலுமே செல்வாக்கு செலுத்துவதோடு அவர்களை உள ரீதியாக மனச்சோர்வுக்கும், விரக்திக்கும், சலிப்புக்குமே தள்ளுவதனால் அவர்களது பணியில் தொய்வுநிலையையும் ஏற்படுத்திவிடும். இதைவிட ஏற்கனவே நோய் தொடர்பான அச்சல் உள்ள மக்களை மேலும் அச்சத்துக்குள்ளாக்குவதோடு பல உள ரீதியிலான நெருக்கீட்டுக்கு மக்களை கொண்டு செல்வதாக அமைகின்றது.

இவ்வாறான செயற்பாடுகள் காலப்போக்கில் தொற்றா நோய்களின் தீவிரத்தை அதிகரிக்க கூடும். அதேபோல் தொற்றா நோய்களால் ஏற்படும் இறப்புக்களையும் அதிகரிக்கக் கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம்.

பெருந்தொற்றான கொரனா காலத்தில் ஏற்பக்கூடிய உடல் உளப் பிரச்சினைகள் ஏற்படக் காரணங்கள்.

1. நோய் தொற்றி விடுமோ என்ற பயம்,

2. பொருளாதார நெருக்கடி தொடர்பான பயம்.

3. நோய்த்தொற்று தொடர்பான தொடர் செய்திகள்.

4. விரும்பியோ விரும்பாமலோ நீண்ட கால நோய்த் தொற்று, நோய்த் தொற்று தடுப்பு செயற்பாடுகளில் ஈடுபட வேண்டிய நிர்ப்பந்தம்.

5. தொழில் இழப்பு.

6. மங்கல நிகழ்வுகள் தடைப்படல் அல்லது மட்டுப்படுத்தப்பட்ட நிகழ்வுகள்.

7. நோயினால் ஏற்படும் இறப்புக்கள்.

8. நீண்ட கால நேரடி கல்விச் செயற்பாடுகள் இல்லாது இருத்தல் மற்றும் தொழிநுட்ப ரீதியிலான கல்விச் செயற்பாடுகள்.

9. பொருட்களின் விலை அதிகரிப்பு.

10. நண்பர்கள், உறவினர்களுடன் இயல்பாக ஒன்றுகூட முடியாமை.

11. தனிமைப்படுத்தல்களில் ஏற்படும் குடும்ப உறுப்பினர்களின் பிரிவு.

உடல் ரீதியிலான பிரச்சினைகள்

1. உடற்பயிற்சி, உடற்தொழிற்பாடுகள் குறைவு, உடற்பருமன் அதிகரிப்பு.

2. மெய்பாட்டு முறைப்பாடுகள் - தலையிடி, உடல் குத்துழைவு, நாரிநோ, பெண்களில் மாதவிடாய் தொடர்பான ஒழுங்கீனங்கள்.….

3. தொற்றா நோய்களின் அதிகரிப்பு.

உள ரீதியிலான பிரச்சினைகள்

1. பயம் - நோய் தொற்றிவிடுமோ என, பொருளாதார நிலை தொடர்பாக, தொழில் நிலையின்மையால் ஏற்படும் எதிர்காலம் பற்றி….

2. புதகளிப்பு - கூடுதலாக நோய்த்தொற்று தொடர்பான எதிர்மறையான தொடர் செய்திகள். ….

3. மனச்சோர்வு – நீண்டகால நோய்த்தொற்று, முடக்கம், தனிமை, தனிமைப்படுத்தல்கள், தொழில் இழப்புக்கள்,  இறப்புக்கள் ….

4. விரக்தி – நோய்த்தொற்றின் தொடர் அலைகள், முடிவில்லா தன்மை…..

5. மெய்ப்பாட்டு முறைப்பாடுகள் - முக்கியமாக தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகள்…..

6. பலவீனமடைந்திருப்பதாக உணர்தல்.

7. தேவையற்று கோபப்படல்.

8. தற்கொலை எண்ணங்கள், தற்கொலைகள் - நோய்த்தொற்றை சமூக இழுக்காக கற்பனை செய்வதால், தொழில் இழப்பு பொருளாதார நெருக்கடி…

தனிமனித சமூக நடத்தை மாற்றங்கள்

1. குடும்பத்தில் பிரச்சினைகள், வன்முறைகள்.

2. நீண்ட நேர சமூக வலைத்தளப் பாவனையும் அதற்கு அடிமைப்படுதலும்.

3. மதுப்பாவனை அதிகரிப்பு.

4. நோய் தொடர்பாக அனைவரையும் சந்தேகத்துடன் பார்த்தல், விலகியிருத்தல்.

5. புயத்தினால் அடிக்கடி நோய்ப்பாதுகாப்பு முறைகளை தேவையற்று செய்தல் - நிர்ப்பந்த பீடிப்புக் கோளாறுக்குள்ளாகுதல்.

மேற்படி பல்வேறு உடல், உள, நடத்தை, சமூக மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இவைதொடர்பான சரியான பகுத்தறிவுசார்ந்த விழிப்புணர்வு ஒவ்வொருவரிலும் ஏற்படுதலும், ஏற்படுத்துதலும் வேண்டும். இதற்கு அனைவரும் அனைவருக்கும் அனைத்து வழிகளிலும் உதவுதலுடன், அன்புடன் ஆதரவாக இருத்தலானது ஆரோக்கியமான சமுதாயத்தை நிலைத்திருக்க உதவும்.


Sunday, August 29, 2021

கொரனா காலமும் உணவுகளும்.

 கொரனா ஆனது பெருந்தொற்று மட்டுமல்ல மிகநீண்ட காலத் தொற்றாகவும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. தொடர்ந்து இக்காலத்தில் வாழ வேண்டுமென்றால்,

1.   சமூக இடைவெளி

2.   முகக்கவசம்

3.   கைகளை சவர்க்காரமிட்டு கழுவுதல்

4.   தொற்றுநீக்கி திரவத்தினை (Sanitizer) பயன்படுத்தல்

5.   தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளல்

போன்ற சுகாதார நடைமுறைகளை அவசியம் கைக்கொள்ள வேண்டும். ஆனால் இவையாவற்றையும் சரிவர முறையாக சமூகத்தில் உள்ள அனைவரும் முறையாக கடைப்பிடிக்கும்போதுதான் நூறு வீத பலனடைய முடியும்.

எம்மைத் தொற்றில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றால் முக்கியமாக எமது உடல் ஆரோக்கியமாக இருத்தல் வேண்டும். நோயுடன் போராடக்கூடிய திறனுடன் இருத்தல் வேண்டும். இதற்கு சரியான உணவும், உணவுப் பழக்கவழக்கங்களையும், சரியான உடற்பயிற்சிகளையும் கைக்கொள்ள வேண்டும்.

சரியான உணவு எனும்போது ஊட்டச்சத்துக்கள் சரிவிகிதசமனாக அமைதல் வேண்டும். சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு உடற் கட்டமைப்புக்கள் ஆன சாரம் (Serum), செந்நீர் (Blood), தசை (Muscle), மூளை Brain), என்பு (Bone), கொழுப்பு (Fat), வெண்ணீர் (Sperm) அல்லது முட்டை (Ovum) என்பன ஆரோக்கியமானவையாக இருத்தல் வேண்டும்.

இவற்றில் ஏதேனும் ஒன்று பலவீனமாக இருந்தால்கூட நோய் எதிர்ப்பு சக்தியானது பலவீனமாகவே காணப்படும். மருந்துகள் முறையாக கண்டுபிடிக்க முடியாத கொரனா போன்ற நோய்நிலைகளில் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே நோயிலிருந்து எம்மைக்காப்பாற்றக்கூடியது.

உணவே மருந்து, மருந்தே உணவு என்பதற்கு அமைய இவ் நோய் எதிர்ப்பு சக்திக்கு உணவும் உணவுப்பழக்கவழக்கங்களும் நோய்க்கு மருந்தாக அமைகின்றன. முக்கியமான உணவுப்பொருட்களில் உள்ள தாவர இரசாயனங்கள் (Phytochemicals – Secondary Nutrition) முக்கிய பங்காற்றுகின்றன.

உணவின் முதல் நிலைச் சத்துக்களான (Primary Nutrition) மாப்பொருள், புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்துக்கள், கனிமங்கள் என்பன உடலுக்கு தேவையான சக்தி, உடல் வளர்ச்சி, உடல் அனுசேபத் தொழிற்பாடுகளை ஒழுங்காக்குதல் என்பவற்றுக்கும் சில உயிர்ச்சத்துக்கள் வளர்சிதை மாற்றங்களைத் தடுப்பதிலும் (Antioxidants) உதவுகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு உடலில் ஆதாரமாக அமைவது நீர் ஆகும். எனவே போதுமான அளவு நீர் பருகுதல் வேண்டும். தாகத்தை உணரமுன் தேவையான நீரினை பருகுதல் நன்று. பொதுவாக 1.5 லீற்றர் – 2 லீற்றர் வரை பருகுதல் வேண்டும். நன்றாக கொதிக்க வைத்த நீர் போதுமானது.

உணவில், முக்கியமாக தாவர உணவில் உள்ள இரண்டாம் நிலைச்சத்துகள் (Secondary Nutrition) ஆன தாவர இரசாயனங்கள் நோயெதிர்ப்பு சக்தியைத் தரக்கூடியனவாகவும், நோயின்போது கிருமிகளை அழிக்கக் கூடியனவாகவும், கிருமித்தொற்றுக்களால் ஏற்படும் உடல் சிதைவுகளை விரைவாக குணமாக்கக் கூடியனவாகவும் இது போன்று பல்வேறு மருத்துவ குணமுடையனவாகவும் காணப்பட்டு உடலை நோய்களால் பாதிக்காவண்ணம் தடுக்கின்றன. இவ்வாறான தாவர இரசாயனங்களே சித்தமருத்துவத்தில் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இவ்வாறான விடயங்களைக் கருத்திற் கொண்டு உணவுகளை உண்ணும் பொழுது, உண்ணும் சிறுபொழுதுகள் (காலை, மதியம், இரவு …. ), பருவ காலங்களையும் கருத்தில் கொண்டு உணவுகளை உட்கொள்ளுதல் வேண்டும்.

உதாரணமாக சிறுபொழுதுகளைக் கருத்திற் கொள்ளும் பொழுது,

1.   காலை உணவில் – பயறு, கடலை, துவரை, உழுந்து போன்ற அவரையின பொருட்கள், எள்ளு, என்பனவற்றை பிரதானமாகவும்,கடுகு, மிளகு, வேர்க்கொம்பு, பெருங்காயம் போன்றவற்றை அதிகமாகவும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

2.   மதிய உணவில் – கிழங்கு, கீரை, இலைவகைகள், பழவகைகள், பால்சார் உணவுகள், மாமிச வகைகள் பிரதானமாக சேர்க்க வேண்டும்.

3.   இரவு உணவில் – பால், துவரம் பருப்பு, கண்டங்கத்தரி, தூதுவளை, சுண்டங்கத்தரி, பிஞ்சு மரக்கறிகள் என்பன சேர்த்தல் வேண்டும்.

இதேபோல் பாரம்பரியமாக கைக்கொள்ளப்படும் பருவகால உணவுகளையும் கவனத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் பருவகாலங்களில் ஏற்படும் உடற்பலவீனங்களை பருவகால உணவுகள் சீர்செய்யக்கூடியன.

எக்காலத்திலும் உடலில் ஏற்படும் சமநிலைக்குழப்பங்களை சரி செய்து நோயின்றி வாழ பின்வரும் முக்குற்றசம திரவியங்களை உணவுடன் முறைப்படி சேர்த்துக்கொள்ளல் வேண்டும்.

1.   ஏலம்

2.   மஞ்சள்

3.   சீரகம்

4.   பெருங்காயம்

5.   வேர்க்கொம்பு அல்லது இஞ்சி

6.   வெந்தயம்

7.   உள்ளி

8.   மிளகு

உணவு உண்ணும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்.

1.   நன்கு பசியேற்பட்ட பின்னர் உணவு உட்கொள்ளவேண்டும்.

2.   கைகளை நன்கு கழுவிக்கொள்ளல்

3.   இறைவனை வணங்குதல்

4.   சரியான இருக்கையில் அமர்தல் (உணவினை அவமதிக்காது)

5.   வேறு கவனங்கள், சிந்தனைகள் இன்றி உண்ணுதல் வேண்டும்.

6.   அதிக சூடான உணவுகளை உண்ணக்கூடாது.

7.   அற்ப சூடுள்ளதாக உணவு இருத்தல் வேண்டும்.

8.   உண்ணமுன் தொண்டைசிறிது நனைக்க சிறிது நீர், உணவின் மத்தியில் நீர் அருந்துதல் வேண்டும்.

உண்ணும் உணவுகள் இருக்கவேண்டிய அளவுகள். – ஒரு நாளுக்கானது

1.   தானியங்கள் மற்றும் மாச்சத்துள்ள உணவுகள் – 6 - 11 பரிமாறல் அளவுகள் (Serving size) – 1பரிமாறல் அலகு 200ml குவளை (Cup), பாண் என்றால் ஒன்பது சமதுண்டுகளாக பிரித்த ஒருபங்கு (50கிராம்).

2.   மரக்கறிகள் – 3 – 5 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு – சமைத்த மரக்கறிகள் எனின் ½ குவளை, சமைக்காத மரக்கறி எனின் 1 குவளை.

3.   புரத உணவுகள் – 3 – 4 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு – சமைத்த மாமிச உணவு – 30கிராம், முட்டை -  1, பருப்பு வகை – 3 மேசைகக்கரண்டி, கருவாடு – 15 கிராம். (இவற்றில் ஏதேனும் ஒருவகை ஒரு நளைக்கு).

4.   எண்ணெய்கொள் விதைகள் (nuts) – 2 – 4 பரிமாறல் அளவு. ஒரு பரிமாறல் அளவு – ஒரு மேசைக்கரண்டி – 15 கிரராம்.

5.   பால் பால்சார் உணவுகள் – 1 – 2 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் அளவு பால் எனின் ஒரு குவளை (200ml), தயிர் எனின் 100ml, பால்மா வகை எனின் 2 மேசைக்கரண்டி (30g).

6.   பழங்கள் – 2 – 3 பரிமாறல் அளவு, ஒரு பரிமாறல் எனின் நடுத்தர அளவுள்ள வாழைப்பழம், தோடமடபழம், வெட்டிய பழங்கள் எனின் ½ குவளை, உலர் பழங்கள் எனின்  இரண்டு மேசைக்கரண்டி.

கொரனா பெருந்தொற்றுக் காலத்தில் …

1.   பரிமாறல் அளவுகளின் கூடுதலான அளவு அல்லது தேவைக்கேற்ப புரத உணவுகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

சைவ உணவுப்பழக்கமுள்ளோர் அதிகம் பயங்கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் எமது சைவ உணவுப்பழக்கமானது பால், பால்சார் உணவுகளை கொண்டது. எனவே இவற்றினை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். பாலில் இருந்து செய்யப்படும் பனீர் சிறந்ததாக இருக்கும். குறிப்பாக சிறுவர்களுக்கு.

அத்துடன் உழுத்தங்களி சிறந்த புரத உணவாகும்.

2.   பழ வகைகள், மரக்கறி, இலைவகைகள் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை அனைத்தும் சேர்த்து ஒரு நாளைக்கு குறைந்தது கட்டாயமாக 500 கிராம் இருத்தல் வேண்டும்.

3.   உணவில் மேற்குறிப்பிட்ட முக்குற்ற சம திரவியங்கள் ஆன வேர்க்கொம்பு, பெருங்காயம், மஞ்சள், உள்ளி, மிளகு என்பவற்றை அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இவற்றினைப்பயன்படுத்தி இரசம் செய்து சிறிது சிறிதாக (30ml) அவ்வப்போது பருகுதல் நன்று.

4.   நீராகாரங்கள் அதிகம் சோத்துக்கொள்ள வேண்டும்.  பழரசங்களாக, கஞ்சி வகைகளாக உட்கொள்ளுதல் நன்று.

கஞ்சியில் புளிக்கஞ்சி சிறப்பான பலனையளிக்கும்.

5.   அதிளவிலான மாப்பொருள் உணவுகள், தனியே கலோரிகள் கொண்ட உணவுகளைத் தவிர்தல் வேண்டும். பரிமாறல் அளவுகளின் குறைந்த அளவுகளைக் கொள்ளல் வேண்டும்.

ஆனால் நோயுற்றபோது உடற்தொழிற்பாட்டுக்குத் தேவையான சக்தியை வழங்கக் கூடியதாக கலோரி அதிகமுள்ள உணவுகளை  எடுத்தல் வேண்டும். (இளநீர், குளிர்சாதனப் பெட்டியில் வைக்காத சோடா வகைகள்)

6.   நோய்த்தொற்றுள்ளபோது எந்த உணவானாலும் இலகுவாக சமிபாடு அடையக்கூடிய உணவுகளாக இருத்தல் வேண்டும். மாமிச உணவுகளில் மீன்வகைகள், முட்டை, இறைச்சிவகைகள் எனில் இரசமாக (Soup) இருத்தல் நன்று.

7.   நோய்த்தொற்றுள்ளபோது களி வகைகளாக, நீராகாரங்களாவே இருத்தல் நன்று. (கூழ், கஞ்சி வகைகள்)

  

 

 

உள நெருக்கீடுகளில் சித்த மருத்துவத்தின் பங்கு.